Saturday, June 18, 2016

கவிதை

வாழ்வின் ஆழத்தைக்காட்டும், அழகைக்காட்டும்
அதனை அழுக்காக்கும் மனித மடமையைக்காட்டும்

சமயத்தில் அம்மடமையைக்கடக்கும் மனிதத்தைக்காட்டும்
சுயமென்னும் புரையேறிய கண்கொண்டு காண்போரது
புரையறுத்துக் கண்முன் உண்மைச்சுயம் காண் ஆடி நிறுவும்

சிலசமயம் தொலை நோக்கி , சிலசமயம் நுண்ணோக்கி
சிலசமயம் வெறுமே பிரதிபலிக்கும் கண்ணாடி
சிலசமயம் வேடிக்கை முகம் காட்டி வயிறுவலிக்க
சிரிக்கவைக்கும் பொருட்காட்சிக்கண்ணாடி

படிப்போனது உயிர்ப்பை அவனுக்குணர்த்தும் ஒரு
உயிர்மானி ..

அந்த ஆயிரம் மடிப்புகளில் உறங்கிக்கிடக்கும்
மொழி சார்ந்த, தன் சமூகம் சார்ந்த, கடந்து சென்ற காலம் சார்ந்த
கண்கூடாய்க் காணும் உலகம் சார்ந்த, சமயத்தில் கண்டும்
உணராத உண்மைகள் சார்ந்த பல்லாயிரம் பதிவுகளை
ஒரு இசையெழும்பத் தழுவிச் செல்லும் ஒரு தென்றல்


சமயத்தில் புயல்...

கவிதைப்பெண்ணே, வாழ்க நீ !

No comments:

Post a Comment